Wednesday, February 06, 2008

கடலை பருப்பு பகோடா

- தமிழினி -

தேவையானப் பொருட்கள்
கடலை பருப்பு - 2 கப்
பச்சரிசி - 1/4 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 7 என்னம் (பொடிதாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - 1 ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
எண்ணைய் - பொரிக்க
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை
அரிசி,பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்து பின் உப்பு சேர்த்து ஆட்டவும் (ஆடு(ஆட்டுக்)கல்லில் அரைக்கவும்) வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து எண்ணையில் போட்டு பக்கோடாவாக உதிர்த்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

கடலை பருப்பு பகோடா ரெடி.

Tips

- தமிழினி -

பக்கோடா, முறுக்கு, சீடை மற்றும் முறுக்கிற்கு மாவு பிசையும் போது, முதலில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பிறகு நீர் ஊற்றி பிசைந்தால், முறுக்கு மொறுமொறுவென்று நல்ல சுவையுடன் இருக்கும். முறுக்கு டப்பாவில் ஒரு சிறுதுணியில் உப்பினைக் கட்டிப் போட்டு வைத்தால், முறுக்கு நீண்ட நாட்களுக்கு நமத்துப் போகாமல் இருக்கும். சீடைகள் செய்யும்போது மாவினை மிகவும் அழுத்தி உருட்டக் கூடாது. அப்படி செய்தால் சீடை வேகும் போது உடைந்துவிடும். இரண்டு விரல்களால் மாவினைக் கிள்ளி, விரல் நுனியாலேயே உருட்டிப் போடவும்.

ஒடியல் கூழ்

- சுவாதி -

தேவையானவை:
ஒடியல் மா - 1/2 கிலோ (பனங் கிழங்கை நன்றாக காயவைத்தால் கிடைப்பது ஒடியல். அந்த ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைத்தான் ஒடியல் மா என்று சொல்வார்கள். கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் இது கட்டாயம் தேவை.)
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள் . முள் குறைந்த மீன்களாக
இருப்பது நல்லது.)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது.)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
அரிசி - 50 கிராம்
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

இதற்கு சைட் டிஷ் என்றால் வாழைக்காய் பொரியல் தான்.

மிக முக்கியமான குறிப்பு:
இந்தக் கூழ் சற்று உறைப்பாக இருக்கும். குடித்ததும் காரமாயிருக்கிறது என்று தண்ணீர் குடிக்க வேண்டாம்..

தண்ணீர் குடித்தீர்களென்றால்... பிறகு நீங்கள் வீட்டில் முக்கியமான
அறைகளில் இருக்க மாட்டீர்கள். போகும் போது உங்கள் அலலபேசியையும் கையில் எடுத்துப் போகவும். அநேகமாக இரவு அங்கு தானிருப்பீர்கள். யாருடனும் பொழுது போக, பேச வசதியாக இருக்கும் அல்லவா? இந்த எச்சரிக்கை முதல் கூழ் குடிக்கும் போதே பாட்டி சொல்லியது.

சுவாதி
quelle - தமிழ் பிரவாகம்

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி 1 சுண்டு
பயற்றம் பருப்பு 1கரண்டி
மிளகு, சீரகம் 1 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு 8
பிளம்ஸ் 8
நெய் 11/2 கரண்டி
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையானளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:
அரிசி, பருப்பைக் களைந்து, 11/2 சுண்டு தண்ணீர் விட்டு, பானையிலோ, ரைஸ்குக்கரிலோ வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி, கறிவேப்பிலையுடன், சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

முந்திரியையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

தமிழினி
தமிழ் பிரவாகம்