Thursday, August 17, 2006

ஒடியல் கூழ்

தேவையான பொருட்கள்:
ஒடியல் மா - 1 கப்
மிளகு தூள் - சிறிதளவு
செத்தல் மிளகாய் - 10
மஞ்சள் - சிறிதளவு
சின்னச்சீரகம் - சிறிதளவு
உள்ளி - ஒரு பெரிய பூடு
உப்பு - ருசிக்கேற்ப
புளி - ஒரு அளவான உருண்டை (மோதகத்தை விடச் சிறியது)

மரவள்ளிக்கிழங்கு
பலாக்கொட்டை
பயத்தங்காய்(அல்லது போஞ்சி)
பூசணிக்காய்

மீன்
இறால்
நண்டு
நெத்தலி

செய்முறை
ஒடியல் மாவை குறைந்தது பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற விடவும்.
புளியை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவிடவும்.

இந்த இடைவெளியில் மரக்கறிகளை சிறிதாக வெட்டி, மீன் வகைகளைத் துப்பரவாக்கி எடுத்துக் கொள்ளவும்.

மிளகு, மஞ்சள், செத்தல், உள்ளி, சின்னச்சீரகம் அனைத்தையும் பசுந்தாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரமொன்றில் தண்ணீர் விட்டு, அதனுள் இந்த அரைத்த சரக்குக் கலவையை இட்டுக் கொதிக்க விடவும். கொதித்து வர மரக்கறிகளையும், மீன் வகைகளையும் அதற்குள் போட்டு அவிய விடவும். மரக்கறிகள் அவிந்து கொண்டு வர, ஊற வைத்த புளியை நன்கு கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும். புளியும் நன்கு கொதித்த பின் ஊற வைத்த ஒடியல் மாவின் மேலுள்ள தண்ணீரை வடித்து ஊற்றி விட்டு, அந்த மாவையும் கொதிக்கும் கலவைக்குள் போட்டுக் கிளறவும். கூழ் இறுக்கமாக இருந்தால் அளவான பதத்துக்கு வருவதற்கேற்ப கொஞ்சம் கொதிநீர் விட்டுத் துளாவவும்.

சுவையான ஒடியல் கூழ் தயாராகிவிடும்.

ஒடியல் பிட்டு

ஒடியல் மாவை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும்.

இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போலத் தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும். குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு அவிக்கவும்.

இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய் கீரை.. போன்ற காய்கறிகள் போட்டு பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, தேங்காய்ப் பூவும் தாரளமாகப் போட்டு அவிக்க மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.

23.5.2005